தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன?

 

மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான். அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும் போது, மற்றொருவருடனோ, மற்றும் பலருடனோ செய்வது எளிதாக இருக்கக் கூடும். அதுவும், ஜபிக்கும்போதோ, அல்லது இறை வழிபாடு செய்யும் போதோ, அல்லது தெய்வீகப் பாடல்கள் இசைக்கும் போதோ, ஒரு குழுவாகச் செய்வதும் நல்லது தான்.

தியானம் என்பது இந்தியாவில் “சாசுவதமான நேர்மையான வழிமுறை” என்று காலந்தோறும் சான்றோர் தொடர்ந்து பின்பற்றிய வழிமுறையில் தோன்றியதாகும். தற்போது உலகில் அனைவரும் இதைப் பயிற்சி செய்கின்றனர். இந்த சொல் இப்போதெல்லாம் பிரபலமாகி விட்டது. சிலருக்கு ஒரு அர்த்தமற்ற போலி பித்தாகவும், புதுப்பாணியாகவும் கூட ஆகியுள்ளது.  அவரவர்களின் அறிவின்படி, அல்லது அறியாமையின்படி, தியானத்தைச் சிலர் பாராட்டுகின்றனர் அல்லது சிலர் கேலி செய்கின்றனர்.

உண்மையில் தியானத்தைப் பற்றி அறிந்துக் கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் விரும்புபவர்களுக்காக விவரங்கள் இங்கு வழங்கப் பட்டுள்ளன. ஏற்கனவே கற்றவர்களும் சில சமயம் இதைப் பற்றி புத்துணர்வைத் தூண்டி ஊக்கம் தரவும், சான்றோர்களது அறிவுரைகளின் சாராம்சத்தைப் பெற்று நலம் பெறவும் உபயோகப்படுத்தலாம்.

ஆழ்நிலை தியானம் என்றால் என்ன? சிறிதளவாவது புத்தியைத் தெளிவாக்க ஒரு வழி தான் தியானம். திரு ரமண மகரிஷியின்படி, தியானம் என்பது “எண்ணங்களைத் வெளியேற்றுதல்” தான். நாம் எப்போதும் அளவுக்கு மீறிய யோசனைகள் செய்துக் கொண்டிருப்பதால், அறிவு குழம்பி கலவரம் அடைகிறது. நாம் இன்பமாகவும், திறமையாகவும் வாழ, இத்தகைய குழப்பத்திலிருந்து மனதை விடுவித்து புத்துணர்ச்சியூட்ட, தியானம் உதவுகிறது. இது மின்கலத்தில் மின்னேற்றுவது போல தான். வலிவற்ற, மெலிந்த மனதில் தியானம் வலிமை உண்டாக்குகிறது.

வீட்டின் ஓர் அறையை கற்பனைச் செய்துக் கொள்ளுங்கள்.  அறையின் எதிர் பக்கத்தில் ஒரு சன்னல் உள்ளது. சன்னலுக்கு வெளியில் அழகிய பூஞ்சோலையும், அற்புத மலைக் காட்சிகளும், நீர் ஊற்றுகளும் உள்ளன. சன்னலைத் திறந்தால்,  கதிரொளியும் இனிய தென்றலும் உறவாடுகின்றன. ஆனால்…..நீங்கள் இந்த அறையை ஒரு கிடங்காக, வைப்பறையாக, பொருட்களைக் குவித்து வைத்து உபயோகப்படுத்த விரும்புகிறீர்கள். எனவே, சன்னலை மூடி விட்டு, மேலும் மேலும் பொருட்களையும், தட்டு முட்டு சாமான்களையும் சேகரித்து வைக்கிறீர்கள். சில பொருட்கள் சிறியவை, ஆனால் மற்றும் சில மிகப் பெரியவை.  பொருட்கள் ஏற ஏற, சன்னலை அணுக முடியாமல் ஆகி விடுகிறது. அடிக்கடி வந்து பார்த்துக் கொள்ளாததால், அறையில் எங்கும் தூசி படிகிறது. பூச்சி புழுக்கள் தோன்றுகின்றன. சிலந்திகள் இங்கு வலைகள் உருவாக்கி சொர்க்கம் போல வாழ்கின்றன.  பாசி படிந்து அருவருப்பான வாசனை எழுகிறது. சில சமயம், இந்த அறையை சுத்தம் செய்ய நினைக்கிறீர்கள். ஆனால் அங்கு போகும்போது, காட்சி கொடியதாகக் காண்கிறது. வேலைச்சுமை திணரடிக்கிறது. மிகவும் கடினமாக, முற்றிலும் இயலாத காரியமாகி விடுகிறது. நாம் சொல்லிக்கொள்கிறோம், “இப்போது மும்முரமாக மற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளோம். இன்னொரு முறை செய்யலாம்.” இப்படி வேலையைத் தள்ளிப் போடுகிறோம், அல்லது அறவே விட்டு விடுகிறோம்.

ஒரு நாள், இந்த அறையை இந்த நிலையில் வைத்து இந்த வீட்டில் வாழ முடியாமல் போகிறது. ஏதோ நம்மை விழிக்க வைக்கிறது. நாம் முடிவு செய்கிறோம், போதுமென்றால் போதும்.  இந்த அறையில் அழகை மீண்டும்  உண்டாக்கி சிறந்த முறையில் பயன்படுத்த, இதைச் சுத்தம் செய்து தான் ஆக வேண்டும்.

சரி, இந்த அறையைத் துப்புரவாக்க என்ன செய்ய வேண்டும்? முதலில், என்ன தொழிற்கருவிகள், என்ன பொருட்கள் வேண்டும் என்று அறிகிறோம். பின்பு இவற்றை எந்த முறையில் உபயோகித்தால் மிக்க பலன் கிடைக்கும் என்று அறிகிறோம். வேலைக்கேற்ற உடைகள் அணிகிறோம்.

பிறகு ஓரிரண்டு அவசியப் பொருட்களை வைத்துக் கொண்டு, மற்ற பொருட்களை அறையிலிருந்து  ஒவ்வொன்றாக அகற்றி வெளியேற்றுகிறோம். சிறிது சிறிதாக இடம் விசாலமடைகிறது. சில துணிகளையும் கருவிகளையும், சுத்தமாக்கும் பொருட்களையும் கொண்டு வந்து, சுவர்களையும், தரையையும், சன்னலையும் தூய்மையாக்குகிறோம். சிலந்தி வலைகளை நீக்கி, பூச்சிளை விலக்குகிறோம்.  அறையில் நறுமணமுள்ள வாசனைத் திரவியங்களைத் தெளிக்கிறோம்.  அவசியமென்று வைத்துக் கொண்ட சில பொருட்களையும் சுத்தமாக்குகிறோம்.  இதையெல்லாம் செய்து முடிக்க மிகுந்த  நேரம் ஆகிறது.  ஆனால், வெற்றி பெறுகிறோம்! கடைசியில் இப்போது சன்னலை அணுக முடிகிறது.

சன்னலைத் திறக்கிறோம்.  என்ன மாயம்! கதிரவனின் ஒளிமயம் அறை முழுவதும் பரவி சொலிக்கிறது.  கதிரொளி எப்போதுமே தான் இருந்து வந்தது.  ஆனால் நாம் அதை நமது வாழ்விலிருந்து அகற்றி வைத்து விட்டிருந்தோம்.  இப்போது மீண்டும் பெற்றுக் கொண்டோம், அவ்வளவு தான்.  மென்மையான இளங்காற்று இனிமையாக பரவுகிறது. இப்போது நாம் இங்கு மகிழ்வுடன் அமர்ந்து இளைப்பாறலாம்; மன அமைதியுடன் சந்தோஷமாக இருக்கலாம்.

நமது மனம் தெளிவு பெற இதைத் தான் ஆழ்நிலை தியானம் நமக்கு செய்கிறது.  நமது புத்தியில் எண்ணங்களின் கூட்டங்களால் நெருக்கடி உண்டாகும் போது, அங்கு சிறப்பாக, திறமாக செயல்பட இடம் இருப்பதில்லை. அதனால் புத்தி தடுமாறுகிறது. தளர்கிறது. உடலிலும் மனதிலும் நோய் உண்டாகிறது. மனதில் வல்லமை குறைகிறது.  கட்டுப்பாடின்றி நலிந்து போகிறது.  மனதின் அழகு குறைந்து, அதனால் உடல் அழகும் குறைகிறது.  எதுவும் நல்வாய்ப்பற்றதாக, உற்சாகமின்றி தெரிகிறது.  எந்த இன்னலும் மிகப் பெரிய தடங்கலாகத் தொன்றுகிறது.  எல்லோரும் கெட்டவர்களாகவும் நமக்கு கெடுதல் எண்ணுபவராகவும் தொன்றுகிறார்கள். மனம் சோர்வடைந்து, ஊக்கமின்றி, எதையும் தவறான நோக்கத்துடன் பார்க்க விழைகிறது.

ஆனால், எல்லா மனிதரையும் தவிக்க வைக்கும் இந்த நிலையிலிருந்து தப்பித்து வெளியேற ஒரு வழி உள்ளது. அது தான் தியானம். தியானம் நமது மனதில் சிறிது சிறிதாகத் தெளிவு உண்டாக்கி, நாம் சந்தோஷமாக, பரிபூரணமாக வாழ புத்தியை ஒர் அற்புத கருவியாக உருவாக்குகிறது.

முதலில் நாம் தியானத்தைப் பற்றி நன்றாக அறிந்துக் கொள்ள  வேண்டும்.  இல்லாவிட்டால், நமது பயிற்சிகள் வெற்றியடைய முடியாது. மனிதர்களின் இயல்பு, மன நிலை, பழக்க வழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், இவற்றுக்கு தகுந்தபடி வித விதமான தியானப் பயிற்சிகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.  இதைப் பற்றியெல்லாம் அறிந்துக் கொண்டு, நமக்குத் தகுந்த பயிற்சி முறைகளை நாம் தேர்ந்தெடுத்து  உபயோகிக்க வேண்டும். முதலில் எளிதான வழி முறைகளைப் பின்பற்றி, பிறகு வேறு பயற்சிகளைத் தொடரலாம்.

எப்படிக் கற்போம்? எங்கிருந்து கற்போம்? இங்கு தான் “சான்றோர்களின் அண்மை” என்ற சொற்றொடர் முக்கியமாகிறது.  “சான்றோர்களின் சமீபம்” என்றால், அவர்களது அறிவுரைகளைப் படித்தும், கேட்டும், யோசித்தும், சிந்தனை செய்வது தான். தாமே மிகவும் மன அமைதியுடன் இருப்பவர்களால் தான் இத்தகைய உபதேசங்களையும் கற்பித்தலையும் உண்மையாக, மேன்மையாக, சிறந்த முறையில் பிறருக்கு அளிக்க முடியும்.

ஆழ்நிலை தியானத்தில் நடவடிக்கை என்ன? அதிகக் கிளர்ச்சியூட்டும் எண்ணங்கள், மனக் கலக்கத்தையூட்டும் எண்ணங்கள், இவை இரண்டுமே நமது மன அமைதிக்கு இடர் தருகிறது. தியானத்தில் நாம் இத்தகைய எண்ணங்கள் எழும்போது, அவற்றைத் தவிர்க்க முயல்கிறோம். மெல்ல மெல்ல அநாவசியமான யோசனைகளைக் குறைக்கப் பார்க்கிறோம். அவ்வளவு தான்!  ஆனால், நமது மனதில் ஏராளமான இன்னல்கள் இருப்பதாலும், அவை இந்த அகன்ற உலகத்தையே சூழ்ந்துக் கொண்டிருப்பதாலும், அறிவுரைகளும், நடைமுறைகளும் தியானப் பயிற்சிகளும் எண்ண முடியாத அளவுக்கு பெருகியுள்ளன. எல்லாம் நமது மனம் அமைதி பெறுவதற்காகத் தான்.

மனதில் உள்ள ஆர்வத்தையும், தகுதிகளையும், பயிற்சி செய்யும் ஊக்கத்தையும், இதுவரை அடைந்த முன்னேற்றத்தையும் பொறுத்து, தியானம் எளிதாகவும் இருக்கலாம், கடினமாகவும் இருக்கலாம்.  முதன்முதலில் செய்யும்போது, மிகக் கடினம் போல தோன்றலாம். ஆனால், நாம் விடாமல், தினமும், முடிந்தால் காலைப் பொழுதில், ஒரே நேரத்தில் சிறிதளவு பயிற்சி செய்து வந்தால், கட்டாயம் மெல்ல மெல்ல எளிதாகும்.  இந்த உன்னத பயிற்சியின் ஒரு சிறப்பு என்னவெனில், மேலும் மேலும் முன்னேற்றம் உண்டாகுமே தவிர, இதில் தோல்வியே கிடையாது.  இந்த பயிற்சியால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிக பெரும் இன்பம் நமக்குக் கிடைக்கும் என்று நாம் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.  தியானம் செய்வதால் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.

பயிற்சியால் பூரணத்துவம் கிடைக்கும். எனவே, தியானப் பயிற்சி செய்ய ஆரம்பிப்போம்! நம்மை முன்னேற்றிக் கொள்வதை விட முக்கியமானது என்ன இருக்கிறது?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!